குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே அரசு பள்ளியில் இயங்கும் பகுதிநேர ரேஷன்கடையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குஜிலியம்பாறை அருகே சுப்பிரமணிபிள்ளையூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனி கட்டிடத்தில் பகுதிநேர ரேஷன்கடை இயங்கி வந்தது. இடப்பற்றாக்குறையால் புதிய கட்டிடம் கட்ட இக்கடையை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இடித்தனர். தற்போது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சமுதாய கட்டிடத்தில் பகுதிநேர ரேஷன்கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் சுப்பிரமணியபிள்ளையூர், வேலாயுதகவுண்டனூர், சொக்கலிங்கம் பிள்ளையூர், தேவகவுண்டனூர், நரிமேடுபுதூர், கோப்பநாயக்கன்பட்டி பிரிவு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 320க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். கடை திறக்கும் நாட்களில் மக்களின் கூச்சல் அளவுக்கு அதிகமாகவுள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தேர்வு நேரங்களில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. எனவே பள்ளி வளாகத்தில் செயல்படும் பகுதிநேர ரேஷன்கடையை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் புதிய கட்டிட பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி